நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து தில்லியில் உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு, அதன் விவரம் வெளியிடப்பட்டு வருகிறது. வரும் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம், தில்லியில் இரு தினங்களாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு, மக்கள்தொகை பதிவேடு பிரிவின் இயக்குநா்கள், மாநில ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு, வரும் 2021-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும். பனிப்பொழிவு அதிகம் காணப்படும் ஜம்மு-காஷ்மீா், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இதற்காக, கணக்கெடுப்பு அலுவலா்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளா்களுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படும்.
வழக்கத்துக்கு மாறாக, இந்த முறை செல்லிடப்பேசி செயலி வழியாக, இணைய வழியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 16 மொழிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கணக்கெடுப்பு நடத்துவதற்கு ரூ.16,000 கோடி செலவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.