ரஃபேல் விமானம் இருந்திருந்தால், இந்தியாவில் இருந்தபடியே பாலாகோட்டில் பயங்கரவாத முகாம்களை அழித்திருக்கலாம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹரியாணாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,
"நாம் பலம் வாய்ந்த புதிய போர் விமானத்தை வாங்குகிறோம். அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு நாம் பூஜை செய்ய வேண்டும். அதனால், போர் விமானத்தில் நான் ஓம் என்று எழுதினேன். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகின்றனர். ஓம் என்ற சொல்லை மறுக்கிறீர்களா? நமது வீட்டில் அதை உச்சரிப்பதில்லையா, எழுதுவதில்லையா?
கிறிஸ்தவர்கள் ஆமென் என்று சொல்வதில்லையா? இஸ்லாமியர்கள் அமீன் என்று சொல்வதில்லையா? ஆனால் இதைக் குறித்து மட்டுமே நீங்கள் (காங்கிரஸ்) கேள்வி எழுப்புவது ஏன்? ரஃபேல் வருவதை வரவேற்க வேண்டும், ஆனால் அவர்கள் மாறாக விமரிசிக்கத் தொடங்கிவிட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள் பாகிஸ்தானைத்தான் பலப்படுத்தும்.
மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுத்ததுபோல், இந்த பேரவைத் தேர்தலிலும் அவர்களுக்கு நீங்கள் பதிலடி தர வேண்டும்.
நம்மிடம் ரஃபேல் விமானம் இருந்திருந்தால் பாலாகோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் செல்லவேண்டிய தேவை இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இந்தியாவில் இருந்தபடியே பயங்கரவாத முகாம்களை அழித்திருக்கலாம்.
இதற்கு முன் ஆட்சியில் இருந்த முதல்வர்கள், அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, இந்திய தேசிய லோக் தளம் கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் தில்லியில் இருந்துதான் ஆட்சி நடத்துவார்கள். ஆனால், மனோகர் லால் கத்தார் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து ஆட்சி நடத்தினார்" என்றார்.