கொச்சி: வீட்டில் யானைத்தந்தம் வைத்திருந்த வழக்கு தொடர்பாக நடிகர் மோகன்லாலுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல மலையாள நடிகரான மோகன்லாலின் கொச்சி வீட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது வீட்டில் அவர் யானைத்தந்தங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறை மற்றும் வன உயிரினச் சட்டப்படி இது குற்றம் என்பதால், கேரள வனத்துறை இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டது.
இதைத்தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த மாதம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம் மோகன்லால் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் யானைத்தந்தங்களை வைத்திருக்க வனத்துறை தனக்கு ஏற்கனவே உரிமைச் சான்றிதழ் அளித்துள்ளதால் இந்த வழக்கு அடிப்படையற்றது என்றும், தான் ஒரு பிரபல நடிகர் என்பதால் விளமபரங்கள் தேட இத்தகைய வழக்குகள் தொடுக்கப்படுவதாகவும் தெரிவிகித்திருந்தார்.
இந்நிலையில் மோகனலாலுக்கு அளிக்கப்பட்ட உரிமைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது, மோகன்லாலுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கினை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.