தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வாட்ஸ்ஆப்பில் போலியான ஆடியோப் பதிவு பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அடையாளம் தெரியாத நபர் எழுப்பிய கேள்வியை விமர்சிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவர் தொலைபேசி உரையாடல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் சார்பில் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அன்ஜனி குமார் கூறியதாவது, ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும், வாட்ஸ்ஆப்பிலும் பரவிய போலி ஆடியோப் பதிவு தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் மீது கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றச்செயலுக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது சிலரால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.