மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள்: சீறிய சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிவராஜ் சிங் சவுகான்
சிவராஜ் சிங் சவுகான்

இந்தூர்: மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது  இந்த அரசில் ஊழல்கள் அதிகரித்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரான சிவராஜ் சிங்  சவுகான் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்தூரில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

அரசுத்துறைகளில் இடமாற்றங்கள் மற்றும் பதவிகளுக்கு ஒரு அமைச்சர் ஒரு விலை  சொல்கிறார். மற்றொரு அமைச்சர் மற்றொரு விலை சொல்கிறார். மத்திய பிரதேச வரலாற்றிலேயே  மிகவும் ஊழல் நிறைந்த அரசு இதுதான். இந்த அரசின் அமைச்சர்கள் மத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகு போல் கிழித்து சிதைக்கிறார்கள்.

வரும் 18-ஆம் தேதி இங்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ள நிலையில் நான் அரசை விமர்சிக்க விரும்பவில்லை. எனக்கு  மாநிலத்தின் மேல் அக்கறை உள்ளது. இங்கு முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறு நான் தொழிலதிபர்களை கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்திய மழையின் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இதுவரை அதுகுறித்த கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. எனவே உடனடியாக நிவாரணங்கள் வழங்குவது குறித்த கேள்வியே எழவில்லை. இந்த அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றால், நான் ஒரு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com