சத்னா: மத்திய பிரதேசத்தில் ஒரே நபரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட விநோதம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் 'கர்வா சவுத்' எனப்படும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு நான்கு நாட்கள் கழித்து கடைபிடிக்கப்படும் இந்த பண்டிகையின் போது, பெண்கள் தங்களது கணவனின் நல்வாழ்விற்காக நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் தங்களது கையில் உள்ள சல்லடை வழியாக நிலவைக் கண்டவுடன்தான் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வர்.
தற்போது மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் மூன்று பெண்கள் சல்லடை வழியாக தங்களது ஒரே கணவரைக் காணும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இதுதொடர்பாக கிடைத்துள்ள தகவல்களின்படி சத்னா மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் பகுதியின் லோத்வாரா என்னுமிடத்தில் காசிராம் காலனி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் கிருஷ்ணா என்பவர் ஷோபா, ரீனா மற்றும் பிங்கி என்னும் மூன்று சகோதரிகளை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாகவே வசித்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு ழநதைகள் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது .
சகோதரிகள் மூவரும் 'கர்வா சவுத்' விரதத்தைக் கடைபிடிக்கும் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.