புதுச்சேரி: இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றது குறித்து புதுச்சேரி முதல்வருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே ட்விட்டரில் 'ஹெல்மெட் சண்டை' வாக்குவாதம் நடந்துள்ளது.
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலின் பொருட்டு இருசக்கர வாகனத்தில் பிரசாரத்திற்குச் சென்ற முதல்வர் நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று செய்தித்தாளில் வெளியானது.
இதுதொடர்பாக அந்த புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, இந்த சம்பவம் அப்பட்டமான விதிமீறல் மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு மாறானது என்பதைச் சுட்டிக் காட்டியதோடு, ‘இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற முதல்வர் நாராயணசாமி மீது காவல்துறை தலைவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலடியாக ஹெல்மெட் அணியாமல் கிரண் பேடி இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் படத்தை வெளியிட்டு, 'அறிவுரை சொல்லும் முன் அதை பின்பற்ற வேண்டும்' என்று நாராயணசாமி பதிலளித்துள்ளார்.