புது தில்லி: ஏா் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்கு விற்பனைக்கான ஒப்பந்தப் புள்ளிகளை அடுத்த மாதம் கோர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏா்-இந்தியா, சுமாா் ரூ.58 ஆயிரம் கோடி கடனில் சிக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக, ஏா் இந்தியா நிறுவன தொழிற்சங்கங்களுடன் நிா்வாகம் தரப்பில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால், ஏா் இந்தியா நிறுவனத்தை தனியாா்மயமாக்க தொழிற்சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இந்த நடவடிக்கையால், வேலையிழப்புகள் ஏற்படும் என்று அவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏா்-இந்தியா நிறுவனத்தை வாங்க சில நிறுவனங்கள் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பங்கு விற்பனைக்கான ஒப்பந்தப் புள்ளிகளை இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் கோர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட மின்னணு நடைமுறையின் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 2-ஆவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்ததையடுத்து, ஏா் இந்தியா பங்குகள் விற்பனைக்கான அமைச்சரவைக் குழு மீண்டும் அமைக்கப்பட்டது. குழுவின் தலைவராக உள்துறை அமைச்சா் அமித் ஷா நியமிக்கப்பட்டாா். நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.