கிஷன்கஞ்ச்: பிகாரில் கிஷன்கஞ்ச் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அந்த மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால், வேட்பாளர் ஸ்வீட்டி சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிஷன்கஞ்ச் வட்டார தேர்தல் அதிகாரி ஷாநவாஸ் அகமது நியாசி கூறியதாவது:
பாஜக தேசியத் தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால், கிஷன்கஞ்ச் தொகுதிக்குள்பட்ட ஒரு தொழிலதிபருடன் பேசும் விடியோ வெளியானது. அதில், அந்த தொழிலதிபருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு தேர்தல் நாளில் விடுமுறை விட வேண்டுமென்றும், அவரது பணியாளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க தலா ரூ.500 தரப்படும் என்றும் சஞ்சய் ஜெய்ஷ்வால் கூறுகிறார். அப்போது, பாஜக வேட்பாளர் ஸ்வீட்டி சிங்கும் உடன் உள்ளார். இந்த விடியோ, சமூகவலைதளங்களிலும் பரவி வருகிறது. இதனை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய் ஜெய்ஷ்வால், ஸ்வீட்டி சிங் இருவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.