ஹரியானா மாநிலத்தில் பெண்களுக்காக, பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது, பெண்கள் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள், வயதான பெண்கள் வாக்களிக்கும் பொருட்டு 'பிங்க் பூத்' என்ற பெயரில் பெண்களுக்காக, பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள்(Pink booth) முதல்முறையாக அமைக்கப்பட்டன. வீட்டில் இருக்கும் பெண்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.
அதன்படி, பிங்க் நிறத்தில் வடிவைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்குச் சாவடிகளில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், போலீசாரும் பெண்களாகவே நியமிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்கள், வயதான பெண்மணிகள் ஆகியோர் எந்தவித இடையூறும் இன்றி வரிசையில் நிற்காமல் எளிதாக வாக்களிக்க இதன்மூலமாக வழிவகை செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று நடந்து முடிந்த ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலிலும் பிங்க் பூத்கள் அமைக்கப்பட்டிருந்தன. கர்னல், பானிபட், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பஞ்ச்குலா போன்ற முக்கிய நகரங்களில் பெண்களுக்கென அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் மற்ற வாக்குச் சாவடிகளுடன் ஒப்பிடும்போது குருகிராமில் 8 பெண்கள் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.