நாட்டிலுள்ள அனைத்து ரயில்களிலும் விரைவில் வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்குள்ளாக ரயில்வேத்துறை முழுவதும் மின்மயமாக்கப்படும். ரயில்வேத்துறைக்கு சொந்தமான இடங்களில் சோலார் தொழில் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் அடிப்படையில் தனியார் பங்கீடு அதிகரிக்கப்படும்.
அதன் ஒரு பகுதியாக போபால் ரயில் நிலையம் தனியார் பங்களிப்புடன் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இது வெற்றிகரமாக முடிக்கப்பட்ட உடன், 12 முதல் 13 ரயில் நிலையங்கள் அடுத்தகட்டமாக இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளன. பின்னர் இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
பிரதமர் மோடியின் தலைமையில் மாசில்லா ரயில்வேத்துறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ரயில்களில் ரகசிய கேமரா மூலம் அப்பகுதி போலீஸாரால் நேரடியாக கண்காணிக்க முடியும்.
ஆனால் இது சாதாரண காரியமல்ல. சில உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவே இதை செய்து முடிக்க 4 முதல் 5 ஆண்டுகாலம் ஆகும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் 6,500 ரயில் நிலையங்களுக்கும் வைஃபை வசதி விரிவுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே 5,150 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.