ஹரியாணாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்பது உறுதியானதையடுத்து, அம்மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் இன்று காலை தொடங்கியது. இதில், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. ஆனால், ஹரியாணா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது.
மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிற்பகல் 2.45 மணி நிலவரப்படி பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும், பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதில், பாஜக மாநிலத் தலைவர் சுபாஷ் பராலாவே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் தேவிந்தர் சிங் பாப்லியைவிட சுமார் 25,000 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார். குறைந்தபட்சம் 8 அமைச்சர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
அதேசமயம், ஜனநாயக ஜனதா கட்சி 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், அது ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.