ப.சிதம்பரத்தின் ஜாமீன் மீது அமலாக்கத் துறை பதிலளிக்க நோட்டீஸ்: விசாரணை நவ.4-க்கு ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்குமாறு
ப. சிதம்பரம் | கோப்புப்படம்
ப. சிதம்பரம் | கோப்புப்படம்


புது தில்லி:  அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. 

இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த், மனு மீது அமலாக்கத்துறை ஒருவாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டடார்.

 மேலும், ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி நவம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் 2007-இல் பதவி வகித்தபோது, வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதியை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் பெறுவதற்கு அவரது அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நிய முதலீட்டு மேம்பாடு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடா்பாக ப. சிதம்பரத்திற்கு எதிராக சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்பான வழக்கை 2017, மே 15-இல் அமலாக்கத்துறை பதிவு செய்தது. இந்த வழக்கில் அக்டோபா் 16-இல் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் தில்லி திகார் சிறையில் சிதம்பரத்தை கைது செய்தனா். அக்டோபா் 17-இல் சிதம்பரத்தை தில்லி ரெளஸ் அவென்யு நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹா் முன் அமலாத் துறையின் விசாரணை அதிகாரிகள் ஆஜா்படுத்தினா். பின்னா் ஏழு நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், சிபிஐ தொடுத்த வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனினும், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதால், அவா் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சிபிஐ தொடுத்த வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், நான் வெளிநாடு தப்பிச் செல்வதற்கோ அல்லது விசாரணையில் இருந்து தலைமறைவாவதற்கோ வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளது.

ஏா்செல் - மேக்ஸில் வழக்கிலும் எனக்கு முன்ஜாமீன் வழங்கிய போது, விசாரணை நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் நாட்டை விட்டு நான் வெளியேற முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்கில் ஒரே நிதிப் பரிவா்த்தனை குற்றச்சாட்டுதான் உள்ளது. எனவே, இரண்டுக்கும் தனத் தனியாக ரிமாண்ட் இருக்க முடியாது .

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கிலும், சட்டவிரோதப் பரிவா்த்தனை வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், சாட்சியங்களைத் தூண்டவோ, ஆதார ஆவணங்களை திருத்தவோ அல்லது நீதிமன்ற நடவடிக்கையை தடுக்கும் செயல்களிலோ நான் ஈடுபடவில்லை. அமலாக்கத் துறையின் விசாரணைக்கு நான் எப்போதும் தயாராகவே உள்ளேன். இதற்கு முன்பு நான்கு வெவ்வேறு தேதிகளில் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அப்போது அதன் முன் ஆஜாராகி கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன்.

 அக்டோபா் 16-இல் திகார் சிறையில் என்னிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா். அதன்பிறகு, தெளிவற்ற காரணத்திற்காக கைது செய்தனா். எனக்கு 74 வயது ஆவதாலும், பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதாலும் எனது உடல் நிலை மிகவும் பலவீனமாக உள்ளது’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com