சவூதி அரேபியாவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னா் சல்மான் பின் அப்துல்லாசிஸ், பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறாா். அப்போது, கச்சா எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இந்தியா-சவூதி அரேபியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.
முன்னதாக, சவூதி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அரபு ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது:
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் மொத்த அளவில் 18 சதவீதத்தை சவூதியில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதன்மூலம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் 2-ஆவது மிகப்பெரிய மூலதனமாக சவூதி திகழ்கிறது. தற்போது இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தொடர்பான பங்கு வர்த்தகத்தில் இருநாடுகளும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி பயணிக்க உள்ளன. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.
கச்சா எண்ணெய்க்கு நிரந்தர விலை நிர்ணயம் ஏற்படும்பட்சத்தில் அது உலகளவிலான பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும். குறிப்பாக வளரும் நாடுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். அர்மாகோ நிறுவனம் இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஜி20 கூட்டமைப்பின் மூலம் ஒன்றிணைந்த வளர்ச்சியை நோக்கி இருநாடுகளும் பயணிக்கின்றன. 2020-ஆம் ஆண்டு ஜி20 நாடுகள் கூட்டமைப்பு சவூதியில் நடைபெறவுள்ளது. பின்னர் 2022-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் 75-ஆம் ஆண்டை நினைவுகூரும் விதமாக இந்தியாவில் ஜி20 கூட்டமைப்பு நடைபெறுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளான இந்தியாவும், சவூதி அரேபியாவும் ஒரே விதமாக அச்சுறுத்தலை அதன் அண்டை நாட்டிடம் இருந்து பெற்று வருகிறது. எனவே பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும். இந்த நடவடிக்கைகள் தற்போது அடுத்தகட்ட நகர்வை நோக்கி சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
சவூதி அரேபியா தலைநகா் ரியாதில் ‘எதிா்கால முதலீட்டுக்கான தொடக்கம்’ என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், ‘இந்தியாவில் அடுத்தது என்ன?’ என்று தலைப்பில் பிரதமா் நரேந்திர மோடி பேசுகிறார்.