மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் சிவசேனை தலைவர்கள் இன்று (வியாழக்கிழமை) அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்தனர்.
மகாராஷ்டிராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து சிவசேனை, ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கூறியது. ஆனால், பாஜக இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், சிவசேனை கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழு மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை இன்று சந்தித்தது. சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், எம்எல்ஏவுமான ஆதித்யா தாக்கரே, கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக இன்று தேர்வான ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்யா தாக்கரே,
"அண்மையில் பெய்த மழையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் தானே மத்திய அரசிடம் பேசுவதாக எங்களிடம் உறுதியளித்தார்" என்றார்.
இதையடுத்து, பாஜகவுடனான பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,
"பாஜகவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அரசு அமைப்பதன் இறுதி முடிவை சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேதான் எடுப்பார்" என்றார்.