சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை 138.68 அடியாக உயர்த்தும் குஜராத் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர், மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் அங்குள்ள மக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் 192 கிராமங்களுக்கும், அதில் வசிக்கும் 32,000 குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. 9-ஆவது நாளாக நீடித்துள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக மேதா பட்கர் மற்றும் அதில் பங்கெடுத்துள்ள மக்களின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
இந்த நிலையை சுட்டிக்காட்டி சிபிஐ மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் இப்போராட்டத்தின் நிலை குறித்து விவரித்துள்ளார். மேலும் உடனடியாக பிரதமர் மோடி தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.