நமது விஞ்ஞானிகளை எண்ணி நாடே பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி டிவீட்
நமது விஞ்ஞானிகளை எண்ணி நாடே பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி டிவீட் செய்துள்ளார்.
ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் கடந்த 2-ஆம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதையடுத்து, இன்று லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், மிகவும் சவாலானதாக கருதப்பட்ட அந்த 15 நிமிடப் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு வரை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி லேண்டர் விக்ரம் சரியாக தரையிறங்கி வந்தது. ஆனால், அதன் பிறகு லேண்டர் விக்ரமிடமிருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைக்கவில்லை. அதேசமயம், 2.1 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பிறகு லேண்டர் விக்ரம் பாதை மாறியதாகவும் தெரிகிறது. அதன் வேகமும் கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் வெளியானது.
லேண்டர் விக்ரமிடமிருந்து தகவல் துண்டிக்கப்பட்டுவிட்டது என்ற முதற்கட்டத் தகவலை மட்டும் இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.
அப்போது பேசிய அவர், "வாழ்க்கையில் ஏற்ற, இறக்கம் இருக்கத்தான் செய்யும். தற்போது அடைந்துள்ளது ஒன்றும் சாதாரண சாதனையல்ல. உங்களை எண்ணி இந்த தேசம் பெருமை கொள்கிறது. நீங்கள் நாட்டுக்கும், அறிவியலுக்கும் மிகப் பெரிய சேவையை ஆற்றியுள்ளீர்கள். நான் உங்களுடன் இருக்கிறேன், தைரியமாக முன் நோக்கிச் செல்லுங்கள்" என்றார்.
இதன்பிறகு, பிரதமர் மோடி இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து, இதுகுறித்து டிவீட் செய்த அவர்,
"நமது விஞ்ஞானிகளை எண்ணி இந்தியா பெருமை கொள்கிறது! அவர்கள் தங்களது முழு முயற்சியைக் கொடுத்துள்ளனர். எப்பொழுதுமே அவர்கள் இந்தியாவைப் பெருமைப்பட வைத்துள்ளனர். சந்திரயான்-2 குறித்து இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்தார். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தொடர்ந்து கடினமாக உழைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.