தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். அதன்படி, இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தெலங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ரகுவேந்திர சிங் சௌகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், மாநில அமைச்சர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தேமுதிக பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தனும் இவ்விழாவில் கலந்துகொண்டார். பதவியேற்ற பின்னர் தமிழிசை, தனது தந்தை குமரி அனந்தனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
ஆளுநராக தமிழிசையின் பெருமைகள்:
கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானாவின் இரண்டாம் ஆளுநர் என்ற பெயரையும், அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் தமிழிசை பெற்றுள்ளார்.
இதன் மூலமாக தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் பெண் ஆளுநர் என்ற பெருமையை தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுள்ளார். முன்னதாக, பர்மாவைச் சேர்ந்த ஜோதி வெங்கடாச்சலம் என்பவர் திருமணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் ஈடுபட்டார். முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், 1977-82ம் ஆண்டு காலகட்டத்தில் கேரள மாநில ஆளுநராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தமிழகத்திலே பிறந்த பெண் முதல் முறையாக மாநிலத்தின் ஆளுநர் பதவி வகிப்பது என்ற பெருமையை தமிழிசை பெற்றுள்ளார்.
அதேபோன்று நாட்டின் தற்போதைய ஆளுநர்களில், 58 வயதில் ஆளுநராகி, நாட்டின் 'இளம் ஆளுநர்' என்ற சிறப்பையும் தமிழிசை தன்வசம் வைத்துள்ளார்.