இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதிய உயர்வு ரத்து: இதுதான் சந்திரயான் -2 திட்டத்துக்கான பரிசா?

விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உட்பட இஸ்ரோவின் ஆயிரக்கணக்கான மூத்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஊதிய உயர்வை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. 
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி


விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உட்பட இஸ்ரோவின் ஆயிரக்கணக்கான மூத்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஊதிய உயர்வை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. 

சந்திரயான் -2 விண்கலத்தின் ஒரு பகுதியான லேண்டர் விக்ரமை கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மெதுவாக நிலவில் தரையிறக்கும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இந்த வரலாற்றுச் சிறப்பு தருணத்துக்கான ஒட்டுமொத்த தேசமும் கண் விழித்துக் காத்துக்கொண்டிருந்தது. ஆனால், நிலவின் தரைப்பகுதியில் இருந்து வெறும் 2.1 கிலோ மீட்டர் தூரம் வரை திட்டமிட்டபடி தரையிறங்கி வந்த லேண்டர் விக்ரம், அதன்பிறகு திசை மாறியது. இதனால், லேண்டர் விக்ரம் மற்றும் தரைக் கட்டுப்பாட்டு மையம் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

லேண்டர் விக்ரம் நிலவில் எதிர்பார்த்தபடி தரையிறங்காதது இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமில்லாது நாட்டு மக்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது. இது சந்திரயான் -2 திட்டத்தின் முழுமையான தோல்வியாக இல்லாதபோதிலும் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. 

இந்த வரலாற்று நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரில் பார்ப்பதற்காகச் சென்ற பிரதமர் மோடி, அதன்பிறகு விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பினார். மீண்டும் காலை 8 மணிக்கு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட இத்திட்டத்திற்காக பங்களித்த அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் நேர்மறையாகப் பேசினார். அவருடைய இந்த பேச்சு நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றது.

மேலும் படிக்க: கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன்: கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!  

இதைத்தொடர்ந்து, இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, கண்ணீர்விட்டு அழுத இஸ்ரோ தலைவர் கே. சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இந்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் படுபயங்கரமாக வைரலானது. பிரதமர் மோடியின் வெறுப்பாளர்கள் சிலரும் இதைக் கண்டு அவரைப் பாராட்டினர் என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நீட்டிய ஆதரவுக் கரமும், சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறியதும் நாட்டு மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

பிரதமர் மோடி மட்டுமில்லாது, நாட்டு மக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையைப் போற்றி புகழந்து வந்தனர். 

லேண்டர் விக்ரமுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, "தைரியமாக முன்நோக்கிச் செல்லுங்கள், உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். எனவே, மத்திய அரசும் செயல்பாட்டு அளவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அவருடைய அரசாங்கமோ அதே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் ஊதிய உயர்வை ரத்து செய்துள்ளது. 

1996-ஆம் ஆண்டு விண்வெளித் துறையில் இருக்கும் எஸ்டி, எஸ்ஈ, எஸ்எஃப் மற்றும் எஸ்ஜி கிரேட் அதிகாரிகளுக்கு இரண்டு கூடுதல் ஊதிய உயர்வை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த நடைமுறை நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஜூன் 12-ஆம் தேதி விண்வெளித் துறை துணைச் செயலாளர் ராமதாஸ் கையெழுத்திட்டு வெளியான துறை ரீதியான அறிவிப்பில், 

"மத்திய அரசின் 6-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவுள்ளது. பணியாளர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் 40 சதவீதம் வரை அடிப்படை ஊதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் காரணமாக எஸ்டி முதல் எஸ்ஜி கிரேட் வரையிலான அதிகாரிகளுக்கு (விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உட்பட) 2 கூடுதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் நடைமுறையை நிறுத்திக்கொள்ளுமாறு நிதித் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, நிதித் துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் கூடுதல் ஊதிய உயர்வு நடைமுறை ஜூலை 1, 2019 முதல் நிறுத்தப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, விண்வெளி பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தோஷ் குமாரிடம் கேட்டபோது, இது உள்விவகாரம் என்று கூறி இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 

எனினும், விண்வெளி பொறியாளர்கள் சங்கம், மத்திய அரசின் இந்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்துமாறு இஸ்ரோ தலைவர் கே. சிவனை நாடியுள்ளனர். இதுகுறித்து விண்வெளி பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிமாறன் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், "செயல்பாடுகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும் திட்டமும், கூடுதல் ஊதிய உயர்வும் முற்றிலும் வெவ்வேறானது. எனவே, கூடுதல் ஊதிய உயர்வுக்கு மாற்றாக அத்திட்டம் இருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

சந்திரயான் -2 விண்கலம் ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. சரியாக அந்த மாதத்தில் இருந்துதான் இந்த கூடுதல் ஊதிய உயர்வு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது உரை மூலம் ஊக்கம் தந்த பிரதமர் மோடி, தற்போது இந்த முடிவை திரும்பப் பெற்று செயல் வடிவத்திலும் அவர்களுக்கு ஊக்கம் தருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com