காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படது.
மொஹரம் பண்டிகையையொட்டி ஊர்வலங்கள் நடைபெற்றால் மக்கள் அதிகம் கூடும் சூழலை பயன்படுத்தி வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாகவும், அதை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. லால் செளக் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உள்ள வர்த்தக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அவற்றின் நுழைவு வாயில் பகுதிகளில் தடுப்புக் கம்பிகள் போடப்பட்டு, அங்கு பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. மருத்துவ அவசரங்களுக்காக சென்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகளால் வழங்கப்படும் சிறப்பு அனுமதிக் கடிதங்கள் கொண்டவர்களுக்கு கூட அந்தப் பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டது.
சந்தைகளும், கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஞாயிற்றுக்கிழமை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ஆம் தேதியிலிருந்து அந்த மாநிலத்தில் தடையுத்தரவுகள் அமலில் இருந்து வருகின்றன. சூழ்நிலை மேம்படுவதன் அடிப்படையில் படிப்படியாக அந்தத் தடையுத்தரவுகள் நீக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் தரைவழி தொலைபேசி சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், செல்லிடப்பேசி மற்றும் இணையதளச் சேவைகளுக்கான தடை தொடர்கிறது.