சந்திரயான்-2: விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தது

நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய சந்திரயான்-2 விக்ரம் லேண்டர், தற்போது இருக்குமிடம் தெரிய வந்திருப்பதாக இஸ்ரோ
சந்திரயான்-2: விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தது

நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய சந்திரயான்-2 விக்ரம் லேண்டர், தற்போது இருக்குமிடம் தெரிய வந்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் பரப்பில் லேண்டர் இருக்குமிடத்தை, நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் படம் பிடித்தது, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சற்று ஆறுதலை இப்போது அளித்திருக்கிறது. இதையடுத்து அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  லேண்டர் விக்ரம் இருக்கும் இடம் தொடர்பான புகைப் படங்களை இஸ்ரோ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே முதல் நாடாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.
புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவைச் சென்றடைந்த விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் பகுதி  செப்டம்பர் 2-ஆம் தேதி வெற்றிகரமாகப் பிரித்து விடப்பட்டது. இதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர், நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் தொடர்ந்து நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரிந்த லேண்டர் பகுதியை 100 கி.மீ. தொலைவிலிருந்து படிப்படியாக குறைத்து நிலவின் பரப்பிலிருந்து 35 கி.மீ. தொலைவுக்கு விஞ்ஞானிகள் கொண்டு வந்தனர்.
லேண்டர் நிலவுக்கு மிக அருகே வந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர்.
இந்த சரித்திர நிகழ்வை நேரலையில் காண்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி, பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விடிய விடிய ஆவலுடன் காத்திருந்தனர்.  இந்திய மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவின் இந்தச் சாதனை நிகழ்வுக்காகக் காத்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே, சனிக்கிழமை அதிகாலை சரியாக 1.40 மணியளவில் லேண்டரை தரையிறக்குவதற்கான கட்டளையை விஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிறப்பித்தனர். 
அதனைத் தொடர்ந்து, லேண்டர் நிலவில் தரையிறங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு நிலையாகத் தாண்டி, நிலவின் பரப்பிலிருந்து 10 கி.மீ. தொலைவுக்கு வந்தபோது, கட்டுப்பாட்டு அறையிலிருந்த விஞ்ஞானிகள் அனைவரும் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
தொடர்ந்து லேண்டர் தரையிறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், விஞ்ஞானிகளின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. நிலவின் பரப்பிலிருந்து 2.1 கி.மீ. தொலைவு வரை லேண்டர் வந்தபோது, அதற்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்புத் துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் எங்கிருக்கிறது என்பதே தெரியாமல் போனது.
இதையறிந்த விஞ்ஞானிகள் பெரும் சோகத்துக்கு ஆளாகினர். இஸ்ரோ தலைவர் சிவன் உள்பட பல விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.
நிலவில் காணாமல் போன லேண்டரை கண்டறிய முடியுமா, அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
தற்போது, விக்ரம் இருக்குமிடம் தெரிய வந்திருப்பது இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே மட்டுமின்றி, இந்திய மக்களிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
நிலவில் இருக்கும் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  
ஆர்பிட்டர் 7 ஆண்டுகள் இயங்கும்: சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஆர்பிட்டர், நிலவை ஓராண்டு சுற்றிவந்து 
ஆய்வு செய்யும் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது அதன் வாழ்நாள் 7 ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்ட படி, ஓராண்டு வாழ்நாள் என்பதைத் தாண்டி, ஏழு ஆண்டுகள் வரை ஆர்பிட்டர் இயங்கி ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதை விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்திருக்கின்றனர்.

மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன் அளித்த பேட்டி:  சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவின் மேற்பரப்பில் குறைந்த வேகத்தில் தரை இறங்க தவறிய லேண்டர், நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், நிலவின் மேற்பரப்பில் லேண்டர் வேகமாக தரை இறங்கி இருக்கும் என்று கருதுகிறேன். 
லேண்டரை குறைந்தவேகத்தில் மெதுவாக தரையிறக்கும் திட்டம் வெற்றிகரமாக முடியவில்லை. பிரக்யான் ரோவர் வாகனத்துடன் கூடிய லேண்டரின் இருப்பிடத்தை, நிலவை சுற்றிவரும் சந்திரயான்-2 விண்கலத்தின்(ஆர்பிட்டர்) உதவியுடன் கண்டறியமுடிந்தது. எதிர்பார்த்ததைவிட அதிக வேகத்தில் தரை இறங்கியிருப்பதால் லேண்டருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
நாட்டுமக்களின் ஆதரவும், பிரதமரின் உரையும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது எங்களது மனவலிமையை ஊக்கப்படுத்தியது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com