ஃபரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக் கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. மேலும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அந்த மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. மனுவை எப்போது விசாரிப்பது என்பது தலைமை நீதிபதி முடிவு செய்வார் என நீதிபதி ரமணா கூறியுள்ளார்.