ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவரும் சூழலில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த எந்தவொரு இளைஞர்களும் புதிதாக பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்ததாக தகவல் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் கூறினார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி வருகிறது. தற்போதைய நிலையில் இந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எவரும் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்ததாக புதிதாகத் தகவல்கள் இல்லை. கடந்த காலங்களில் சில இளைஞர்கள் அவ்வாறு தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். முடிந்த வரையில் அவர்களில் பலரை மீட்டுள்ளோம்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல்கள் கிடைத்தது. இந்நிலையில், குல்மார்க் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவரை ராணுவத்தினர் கைது செய்துள்ளதையும் அறிந்தோம்.
தெற்கு காஷ்மீர் பகுதியில், பழங்கள் சேகரிக்கச் செல்லக் கூடாது என்று பயங்கரவாதிகள் பழக்கடைக்காரர்களை மிரட்டிய சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
எனினும், பழக்கடைக்காரர்கள் தொடர்ந்து பழங்கள் சேகரித்து வருகின்றனர். அந்தச் சூழ்நிலை தொடர்பாக காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மக்களை எவரும் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்வதே எங்கள் பணியாகும். அவர்கள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைச் சொல்வது எங்கள் பணியல்ல.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் இருந்து புதன்கிழமை 230-க்கும் அதிகமான லாரிகளில் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு சந்தைப் பகுதிகளுக்கு பழங்கள் கொண்டு செல்லப்பட்டன என்று காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் கூறினார்.