பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட 2,772 பரிசுப் பொருள் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் ஏலமிடப்பட இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அவருக்கு நினைவுப் பரிசுகள் உள்பட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவை அனைத்தையும் ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் நிதியை மத்திய அரசின் முக்கியத் திட்டங்களின் ஒன்றான கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக பயன்படுத்த பிரதமர் மோடி முடிவெடுத்தார்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 1,800-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருள்கள் ஏலத்தில் விடப்பட்டன. அதன் பிறகு பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது அவருக்கு ஏராளமான பரிசுப் பொருள்கள் அளிக்கப்பட்டன.
இவ்வாறாக இப்போது 2,772 பொருள்கள் உள்ளன. இவை அனைத்தும் வரும் 14-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் ஏலமிடப்பட இருக்கின்றன. இவற்றின் விலை ரூ.200 முதல் ரூ.2.5 லட்சம் வரை பொருளின் மதிப்புக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகலாத் படேல் கூறியுள்ளார்.