உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3. 6 ஆக பதிவாகியது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
சமோலி மாவட்டத்தின் பண்டுகேஷ்வர் பகுதியில் 14 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதனால் வியாழக்கிழமை அதிகாலை 2. 22 மணியளவில் அந்த மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3. 6 ஆக பதிவாகியிருந்தது. மக்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது, அதிர்வு ஏற்பட்டதால், அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். எனினும், இந்த அதிர்வால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.
இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இந்தியாவில், பிரிவு 2, 3, 4, 5 என 4 பிரிவுகளாக நிலநடுக்கம் அபாயம் உள்ள பகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் 5-ஆவது பிரிவில் உள்ளன.