நாடு முழுவதும் சிறிய மற்றும் பெரிய அளவிலான உணவு பூங்காக்களை அமைக்க ரூ.3,000 கோடி நிதியுதவியை அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளது என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்தார்.
இந்திய -அமெரிக்க வர்த்தக சபையின் வட இந்திய கவுன்சில் (ஐஏசிசி-என்ஐசி) சார்பில் 15-ஆவது இந்திய-அமெரிக்க பொருளாதார மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ராமேஸ்வர் தேலி பங்கேற்றுப் பேசியதாவது:
நாடு முழுவதும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் சிறிய மற்றும் பெரிய அளவிலான உணவு பூங்காக்களை அமைப்பதற்காக, மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துக்கு ரூ.3,000 கோடி நிதி வழங்க உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளது. இதில் முதல்கட்ட நிதி விடுவிக்கப்படுவதற்கு, இன்னும் சில நடைமுறைகள்தான் நிறைவடைய வேண்டியுள்ளது. அந்த நிதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
உணவு பதப்படுத்துதல் ஆலைகளை அமைப்பதற்காக, 75 சதவீதம் வரை மானியம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கையை நாட்டிலுள்ள நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு தொடர்ந்து சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, உணவு பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்துவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.1,400 கோடியாக உள்ளது. இது, ரூ.3,000 கோடியாக அதிகரிக்கப்படுவது அவசியம் என்றார் ராமேஸ்வர் தேலி.