திருமலையில் பௌர்ணமியையொட்டி சனிக்கிழமை மாலை நடத்தப்பட்ட கருடசேவையானது சோதனை ஓட்ட சேவையாக நடத்தப்பட்டது.
திருமலை ஏழுமலையானுக்கு வரும் செப். 30-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் போது, காலை, இரவு என இரு வேளைகளிலும் 14 வாகன சேவைகள் நடைபெற உள்ளன.
இதில், மிக முக்கிய வாகன சேவையாகக் கருதப்படுவது கருட சேவை. பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் இரவு கருட வாகன சேவை நடத்தப்படுகிறது. கருட வாகனம் எடை கூடியது. அதில் கஜ மாலைகள், 32 கிலோ எடையுள்ள சஹஸ்ர காசு மாலை, பல வைர, வைடூரிய, மாணிக்க, முத்து, பவள, மரகத கற்களால் ஆன பலவகை ஆபரணங்கள், மலர்கள் என சர்வ அலங்காரத்துடன் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வர உள்ளார்.
எனவே பல ஆயிரம் கிலோ எடையுள்ள இந்த வாகன சேவை நடைபெறும்போது, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தேவஸ்தானம் ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்துக்கு முன் வரும் பௌர்ணமியின்போது கருட வாகனச் சோதனை ஓட்டத்தை நடத்தி வருகிறது.
அதன்படி, சனிக்கிழமை இரவு 7 மணிக்கு திருமலையில் கருட சேவை நடைபெற்றது. கருடர் மீது மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் வலம் வந்தார். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.