"15-ஆவது நிதிக் குழுவின் வரம்புகளை மாற்றியமைத்ததற்கு முன்பாக மாநில முதல்வர்களின் கருத்துக்களை மத்திய அரசு கட்டாயம் கேட்டறிந்திருக்க வேண்டும்' என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு, 15-ஆவது நிதிக் குழுவின் வரம்புகளை மாற்றியமைக்க விரும்பியிருந்தால், மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்டி அவர்களின் ஆதரவுடன் அதனை நிறைவேற்றியிருக்க வேண்டும். அதைவிடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. இது கூட்டாட்சி கொள்கை தத்துவத்துக்கு முற்றிலும் முரணானது.
மத்திய அரசின் இந்த செயல் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வளங்களை கொள்ளையடிக்கும் முயற்சியாகும். நிதி குழுவானது தற்போது நீதி ஆயோக்கின் தயவில்தான் செயல்பட்டு வருகிறது.
எனவே, நிதி குழுவில் கூடுதல் வரம்புகள் சேர்க்கப்பட்டது தொடர்பாக புதிய சர்ச்சைகள் எழாமல் இருக்க மாநில முதல்வர்களின் ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்தாக உள்ளது என்றார் அவர்.
கடந்த ஜூலையில், 15-ஆவது நிதிக் குழுவின் வரம்புகளில் மத்திய அரசு மாற்றங்கலை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.