தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. உதயன்ராஜே போஸ்லே, அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் சனிக்கிழமை இணைந்தார். அத்துடன், தனது எம்.பி. பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார்.
சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரத்தின் சதாரா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உதயன்ராஜே. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான இவர், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர
ஃபட்னவீஸ், பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முன்னிலையில் அக்கட்சியில்
உதயன்ராஜே இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், "மராட்டிய மன்னர் சிவாஜியின் வழித்தோன்றல் ஒருவர், பாஜகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உதயன்ராஜே போஸ்லேவின் வருகை, எதிர்வரும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு உதவும். அந்தத் தேர்தலில் நான்கில் மூன்று பங்கு பலத்துடன் பாஜக கூட்டணி வெற்றி பெறும்' என்றார்.
மகாராஷ்டிரத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகி வருகின்றனர். இது, அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வரும் 17-ஆம் தேதி முதல் சரத் பவார் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.