உத்தரப் பிரதேசத்தில் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழகியதாக, தலித் இளைஞர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த ஆணவக் கொலை தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்சினி கூறியதாவது:
ஹர்டோய் மாவட்டத்தின் பதேசா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்த அபிஷேக் (20) என்ற இளைஞர், வேறு ஜாதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக சென்ற அபிஷேக்கை தாக்கிய சிலர், ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். பின்னர், அவரை உயிரோடு எரித்தனர். அபிஷேக்கின் அலறல் கேட்டு வந்த உள்ளூர் மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 5 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.