இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்த டிரம்ப் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததாவது:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
இந்தியா ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை விலக்கி கொண்டதையடுத்து, தெற்கு ஆசியாவில் இரு அண்டை நாடுகளுக்கிடையேயான உறவில் பதற்றம் அதிகரித்தது. இருப்பினும், தற்போது, அந்த விவகாரத்தில் ஏராளமான முன்னேறங்கள் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் 22-ஆம் தேதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, 50,000 இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்டமான மோடி நலமா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாட உள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை எடுத்துக் காட்டும் வகையில் அதிபர் டிரம்ப்பும் இந்த நிகழ்ச்சியில் மோடியுடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டம் வரும் 27-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடியும், பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானும் பங்கேற்க உள்ளனர். அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், இம்ரான் கானை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.