இந்தியப் பொருளாதாரத்தின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது; ஆனால், இந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மறுக்கிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்து, இந்திய பங்குச் சந்தையில் கடந்த 6 ஆண்டுகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் சுமார் 4,500 கோடி டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்தனர்; ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 450 கோடி டாலர் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வர வேண்டும் என்பதற்காக, இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பை சுமார் ரூ.356 லட்சம் கோடியாக அதிகரிப்போம் என்று கவர்ச்சிகரமாக பேசுவதால் பொருளாதாரத்தை மேம்படுத்திவிட முடியாது. வெளிநாடுகளில் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவதால், முதலீடுகளை ஈர்க்க முடியுமா?
இந்தியப் பொருளாதாரத்தின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தவறான கொள்கைகள், பொருளாதார முதலீட்டின் அடிப்படையை சிதைத்துள்ளன. ஆனால், இந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்கு, மத்திய அரசு மறுக்கிறது.
உலக அளவில் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுப்பதற்கு, தற்போதைய பொருளாதார மந்த நிலை தடைக்கல்லாக மாறியுள்ளது.
எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.