உத்தரப் பிரதேசத்தில் சின்மயானந்துக்குச் சொந்தமான சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், அவருக்கு எதிராகப் பாலியல் புகார் அளித்திருந்தார். தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவல் துறை ஐ.ஜி. நவீன் அரோரா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்தது. அந்தக் குழு, ஷாஜகான்பூரில் உள்ள கல்லூரி விடுதியில் மாணவி தங்கியிருந்த அறை, சின்மயானந்தின் வீடு, ஆசிரமத்தில் உள்ள படுக்கையறை ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது.
அதைத் தொடர்ந்து, சின்மயானந்த், அவர் மீது புகார் அளித்த மாணவி, அவரது தாயார், ஆண் நண்பர்கள், கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தியது.
அதைத் தொடர்ந்து, அந்த மாணவி சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில், நீதித் துறை நடுவர் கீதிகா சிங் முன்னிலையில் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். அவர் வாக்குமூலம் அளித்த அடுத்த சில மணிநேரத்திலேயே சுவாமி சின்மயானந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அதற்காக, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சின்மயானந்தைக் கைது செய்யாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக அவருக்கு எதிராகப் புகார் அளித்த மாணவி மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பாலியல் புகார் வழக்கில் சிறப்புப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார்.