புது தில்லி: நாடே மிக்கவும் எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் வரும் திங்கள் முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-இல் இடிக்கப்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை நிர்மோஹி அகாரா (துறவியர் அமைப்பு), சன்னி மத்திய வக்பு வாரியம், ராம் லல்லா ஆகிய மூன்று தரப்புகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலனான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அயோத்தி வழக்கில் வரும் திங்கள் முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி உச்ச நீதிமன்ற அலுவல்கள் முடியும் மாலை 4 மணிக்கு பதிலாக கூடுதலாக ஒருமணி நேரம் அதாவது மாலை 5 மணி வரை இந்த வழக்கு விசாரணையை தொடர முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.