டெல்லியில் கால் டாக்சிகளில் முதலுதவிப் பெட்டியில் ஆணுறை இல்லையென்றால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக கால் டாக்சி டிரைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
திருத்தப்பட்ட மோட்டர் வாகனச் சட்டம், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்படி, அனைத்துப் பகுதிகளிலுமே போக்குவரத்து போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறே, டெல்லியிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கால் டாக்சிகளில் சோதனை மேற்கொள்ளும் போலீசார், முதலுதவிப் பெட்டியில் ஆணுறை இல்லையென்றால் அதற்கு அபராதம் விதிக்கின்றனர்.
ஆனால், மோட்டார் வாகனச் சட்டத்தில் கார்களில் முதலுதவிப் பெட்டியில் ஆணுறை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. மேலும், கார்களில் ஏன் ஆணுறை வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட போக்குவரத்து போலீசாருக்கு இல்லை என்று கூறுகின்றனர் டெல்லி கால் டாக்சி டிரைவர்கள்.
காரின் குழாய்களில் ஏதேனும் கசிவு ஏற்பட்டாலோ, விபத்துகளில் யாருக்கேனும் அடிபட்டு ரத்தம் கசிந்தாலோ அதனை தடுத்து நிறுத்த ஆணுறை பயன்படுத்துகிறது. மழைக்காலங்களில் ஷூக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது. பாதுகாப்பான உடலுறவுக்கு மட்டுமல்ல; இதுபோன்ற பிரச்சனைகளிலும் ஆணுறை உதவுகிறது என்று தெரிவித்தனர்.
சட்டத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் கால் டாக்சியில் ஆணுறை இருப்பது அவசியமானது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்ததால், அதனை வைத்து அபராதம் விதிப்பதாக டிரைவர்கள் புலம்புகின்றனர்.