ரயில்வே பாதுகாப்புப் படையில் புதிதாக 10,537 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
1,120 உதவி ஆய்வாளர்கள், 8,619 காவலர்கள், 798 உதவி அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய ஆள்தேர்வு பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. பெண் காவலர்களும் ரயில்வே பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டனர். தற்போது 2.25 சதவீத பெண் காவலர்கள் ரயில்வே பாதுகாப்புப் படையில் உள்ளனர்.
ரயில்வே அமைச்சகம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியான இடங்களில் சேர்வதற்கு 82 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். 1,120 உதவி ஆய்வாளர் காலியிடங்களுக்கு மட்டும் 14.25 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்தப் பணியிடத்துக்கு 819 ஆண்களும், 301 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். காவலர்களில் 4,403 ஆண்களும், 4,216 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
400 தேர்வு மையங்களில் இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்முறையாக கணினியில் தேர்வு நடைபெற்றது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.