தேசிய அளவில் ஹிந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் கொள்கை மிகவும் அபாயகரமானது; நமகு நாட்டில் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எனது கருத்து என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடர்பாக அவர் பேசியதாவது:
இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவரை உரிய முறையில் மதித்து நடக்க வேண்டும். அதே நேரத்தில் அவர் உள்நாட்டில் இருக்கும்போது, ஆட்சியில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டவும், அவரிடம் கேள்வி எழுப்பவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுஉரிமை உண்டு.
ஹிந்தியை முன்னிறுத்துவது, ஹிந்துத்துவத்தை வைத்து அரசியல் நடத்துவது, ஹிந்துஸ்தான் என்று மதரீதியாக பேசுவது ஆகிய பாஜகவின் கொள்கைகள் மிகவும் அபாயகரமானவை. இதன் மூலம் நாட்டுக்கு தீமையே விளையும். என்னைப் பொருத்தவரையில் தாய் மொழியை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையே சிறந்தது.
பாஜகவினர் மற்றும் அது சார்ந்த அமைப்பினர் பலர் கும்பல் கொலை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். உண்மையில் அவர்கள் செய்வது ஹிந்துத்துவத்துக்கும், ராம பிரானின் கொள்கைகளுக்கு எதிரானவை. பாஜக கூறி வரும் ஹிந்துத்துவம் என்பது முழுவதும் அரசியல் சாயம் பூசப்பட்டது. அதற்கும் உண்மையான ஹிந்துவத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு வெவ்வேறு மதம், இனத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். எனது மாநிலமான கேரளத்தில் இதனை நான் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.
மகாராஷ்டிரத்தில் கூட சத்ரபதி சிவாஜி ஆட்சி காலத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென்றுதான் அவர் வலியுறுத்தினார். மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் நடத்துவது குறுகிய காலத்தில் கட்சிகளுக்கு ஆதாயம் தரலாம். ஆனால், நீண்டகாலத்தில் அது தேசத்துக்கு பல்வேறு வகையில் கேடுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.