தெலங்கானாவில் உள்ள தடுப்பணையில் டிக் டாக் விடியோ எடுத்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள பிரேம்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரு நண்பர்களுடன் அருகிலுள்ள கப்பலால் தடுப்பணைக்கு குளிக்கச் சென்றுள்ளார்.
முன்னதாக டிக் டாக் சமூக வலைதளத்தில் வெளியிடுவதற் காக மூன்று பேரும் தடுப்பணையில் இருந்து பாய்ந்து வரும் நீரில் நின்று விடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நீர்வரத்து அதிகரித்து மூன்று பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் பெரும் சிரமத்திற்கு இடையே நீந்தி கரையேறிய நிலையில், தினேஷ் மட்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.
தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு படையினர், 48 மணி நேரம் தேடி ஞாயிறு காலை தினேஷின் உடல் மீட்கப்பட்டது. அவரது நண்பர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் டிக் டாக் விடியோ எடுப்பதில் மும்முரமாக இருந்ததால், நீர் வரத்து அதிகரித்ததை கவனிக்காமல் இருந்தது தெரியவந்தது.