புது தில்லி: மத்திய அரசிடம் போதுமான அளவு வெங்காயம் இருப்பு உள்ளது என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மித மிஞ்சிய மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு சந்தைகளில் அதன் வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக, தேசிய தலைநகர் தில்லி உள்பட சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.70-80-ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது.
உள்நாட்டு சந்தைகளில் வரத்தை அதிகரிக்கவும், வெங்காயத்தின் விலை மேலும் உயர்வதை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு கடந்த சில வாரங்களாகவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில்லறை விற்பனையில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனவே, வர்த்தகர்கள் வெங்காயத்தை இருப்பு வைக்கும் அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்ககூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மத்திய அரசிடம் போதுமான அளவு வெங்காயம் இருப்பு உள்ளது என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
மத்திய அரசிடம் போதுமான அளவு வெங்காயம் இருப்பு உள்ளது; தேவையுள்ள மாநிலங்கள் மத்திய அரசிடம் பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்கனவே திரிபுரா, ஆந்திரா மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு தேவையான அளவு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துளார்.