பாரதிய ஜன சங்கத்தின் துணை நிறுவனரான தீன தயாள் உபாத்யாயவின் 103-ஆவது பிறந்த தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவருக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.
சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை மேம்பட அவர் மேற்கொண்ட முயற்சிகளை அப்போது அவர்கள் கனிவுடன் நினைவுகூர்ந்தனர்.
"தீன தயாள் உபாத்யாய தொலைநோக்குப் பார்வை கொண்ட அறிவுஜீவியாவார். பின்தங்கிய மக்களின் மேம்பாட்டுக்காக வேரில் இருந்தே அயராது பணியாற்றிய அவர், நமக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் ஆவார்' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "இந்தியாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் தீன தயாள் உபாத்யாய. சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக இரக்கத்துடன் செயலாற்ற வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை நமக்கு கூறும் அறிவுரையாகும்' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக உபாத்யாய எவ்வாறு செயலாற்றினார் என்பது குறித்து தாம் உரையாற்றிய காணொலி ஒன்றையும் பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.
அமித் ஷா மரியாதை: தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தீன தயாள் உபாத்யாய பிறந்த தினத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்துகொண்டு, உபாத்யாய சிலைக்கு மலர் மரியாதை செலுத்தினார்.