புது தில்லி: இந்திராணி முகர்ஜியை சந்தித்த ஆதாரத்தை சிதம்பரம் அழித்துள்ளதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 11-ஆம் தேதி முதல் தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்திராணி முகர்ஜியை சந்தித்த ஆதாரத்தை சிதம்பரம் அழித்துள்ளதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி பின்னர் அப்ரூவராக மாறி விட்டார். தான் சிதம்பரத்தை சந்தித்தாக அவர் சிபியிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
அதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்த சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா, ' இந்திராணி முகர்ஜியை தனது இல்லத்தில் சிதம்பரம் சந்தித்தற்கு அடையாளமான பார்வையாளர் பதிவேட்டின் பக்கங்கள் சிதம்பரம் தரப்பால் கிழிக்கப்பட்டுள்ளதாகவும். ஆனால் இந்திராணி சந்திப்பிற்காக பயன்படுத்திய தனியார் விடுதி வாகனத்தின் பதிவேட்டை வைத்து இதைத் தங்கள் உறுதி செய்து கொண்டதாகவும்' தெரிவித்தார். அத்துடன் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவிற்கும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்
இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.