உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில், கணவருடன் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த தாய், தனது 5 குழந்தைகளையும் கங்கையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கங்கையில் வீசப்பட்ட ஆர்த்தி (12), சரஸ்வதி (10) ஆகியோரடு உடல்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்த நிலையில், மாதேஸ்வரி, ஷிவ்ஷங்கர், கேஷவ் பிசாத் ஆகியோரது உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குழந்தைகள் தள்ளிவிடப்பட்ட இடம் மிக ஆழமான ஆற்றுப்பகுதி என்பதால், உடல்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஜான்கிராபாத் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு - மிருதுள் யாதவ் தம்பதிக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமையும் இருவருக்குள்ளும் சண்டை முற்றியதில், மஞ்சு தனது 5 பிள்ளைகளையும் கங்கையில் வீசியுள்ளார். பிறகு கங்கைக் கரையிலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் இருந் கிராம மக்களிடையே தான் செய்த கொடூரச் செயலைப் பற்றி கூறியிருக்கிறார்.
இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தைகளின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காத விரக்தியில் தாய், தனது 5 குழந்தைகளை ஆற்றில் வீசியதாக வெளியான தகவல்களை காவல்துறை மறுத்துள்ளது. இது குடும்பத் தகராறில் ஏற்பட்ட சம்பவம் என்று காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.