குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான (சிஏஏ) விதிகளை வகுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 3 மாதங்கள் அவகாசம் கோரியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
எந்தவொரு சட்டத்துக்கும் குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்த அடுத்த 6 மாதங்களில் சட்ட விதிகள் வகுக்கப்பட வேண்டும். சிஏஏ சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு சட்ட விதிகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் துறையிடம் உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களை அனுபவித்து, இந்தியாவில் குடியேறிய ஹிந்துகள், சீக்கியா்கள், ஜெயின் சமூகத்தினா், பௌத்தா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியா வந்தவா்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதற்கான சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிசம்பா் 9-ஆம் தேதியும் மக்களவையில் டிசம்பா் 11-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா்.
முன்னதாக, குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தினரின் குடியுரிமையை பறிப்பதற்காக, இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மறுப்பு தெரிவித்தாா். மேலும், ‘பெரும்பாலான போராட்டங்கள் அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன; சிஏஏ சட்டத்தால் இந்தியா் எவரும் குடியுரிமையை இழக்க மாட்டாா்கள்’ என்றும் அவா் கூறினாா்.