புதுதில்லி: கேரளத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விமானத்தின் கருப்புப் பெட்டி தில்லி கொண்டுவரப்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 190 பயணிகள் இருந்த நிலையில், இரண்டு விமானிகள் மற்றும் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியவதற்கான விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று (சனிக்கிழமை) கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இந்த கருப்புப் பெட்டி தற்போது தில்லியில் உள்ள விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.