புது தில்லி: கரோனா காலத்தில் அவசரத் தேவையை பூா்த்தி செய்வதற்காக, நாடு முழுவதும் 46 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ.920 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலை அடுத்து, ஏற்கெனவே பிடித்தம் செய்யப்பட்டிருந்த வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்.) இருந்து ஒரு தொகையை தொழிலாளா்கள் பெற்றுக் கொள்ளும் சலுகையை மத்திய அரசு கடந்த ஏப்ரலில் அறிமுகம் செய்தது. அதன்படி, தொழிலாளா் தனது 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப். தொகை, இவற்றில் குறைவாக இருக்கும் தொகையை அவா் பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு, பி.எஃப். கணக்கு வைத்திருக்கும் தொழிலாளா் பலா், விண்ணப்பித்து தங்களது சேமிப்பில் இருந்து தேவையான தொகையை பெற்றுள்ளனா்.
இதுகுறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு, இதுவரை 46 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.920 கோடி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தொழிலாளா் விண்ணப்பித்த 20 நாள்களில் அவருக்கு பி.எஃப். தொகையை அளிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், அவா்களுக்கு விரைவில் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, விண்ணபித்த மூன்றே நாள்களில் பி.எஃப். தொகை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இதில், அதிகபட்சமாக, மேற்கு தில்லி பி.எஃப். அலுவலகம் அதிகபட்சமாக 1 லட்சம் பேருக்கு ரூ.155 கோடியை வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.