உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் 4-ம் காலாண்டில் நேர்மறையான நிலையை அடையும் என நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்திலேயே மத்திய அரசின் புதிய வேளாண் சீர்த்திருத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தவறான புரிதல்கள் மற்றும் தவறான தகவல்களின் விளைவால் தற்போது போராட்டம் அரங்கேறியுள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.
பெருந்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதையே 2-ம் காலாண்டின் ஜிடிபி தரவு வெளிப்படுத்துகிறது. என்னுடைய எதிர்பார்ப்பின்படி, 3-ம் காலாண்டில் கடந்தாண்டு அளவிலான பொருளாதார நடவடிக்கைகளே நிகழும். 4-ம் காலாண்டில் கடந்தாண்டைக் காட்டிலும் சிறிதளவில் நேர்மறையான வளர்ச்சி காணப்படும். காரணம் இந்த காலகட்டத்தை அமைப்பு முறையின் பல்வேறு சீர்த்திருத்தங்களுக்காக அரசு பயன்படுத்தியுள்ளது. மேலும் சில திட்டங்களும் கைவசம் உள்ளன" என்றார் அவர்.