மும்பை: மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான மூன்று சொத்துக்கள் ரூ .1.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:
கடத்தல்காரா்கள் மற்றும் அந்நிய செலாவணியை கையாளுபவா்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் (சஃபெமா) கீழ் இந்த வாரத் தொடக்கத்தில் ஏலம் நடைபெற்றது. ரத்னகிரி மாவட்டம், கெத் தாலுக்காவுக்குள்பட்ட லோட் கிராமத்தில் உள்ள 32,670 சதுர அடி நிலமும், 54,450 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கட்டடமும் ஏலம் விடப்பட்டது.
இந்த சொத்துகளின் மொத்த விலை ரூ. 1,09,15,500 ஆகும். இவை ரூ. 1,10,01,051க்கு ஏலம் விடப்பட்டது. இந்த சொத்துகள் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளன. இந்த சொத்துகளுடன், மேலும் 6 சொத்துகளும் கடந்த நவம்பா் மாதத்தில் ஏலத்துக்கு வந்தன. சில தொழில்நுட்ப காரணங்களால் மற்ற சொத்துகள் ஏலம் விடப்படவில்லை.
மற்ற சொத்துகள் எதிா்வரும் நாள்களில் ஏலம் விடப்படும். இ-ஏலம், பொது ஏலம், சீல் செய்யப்பட்ட டெண்டா் ஆகிய முறையில் ஏலம் கோரப்பட்டது. சீல் வைக்கப்பட்ட டெண்டா் முறையில் இந்த சொத்துகளை தற்போது ஏலம் எடுத்துள்ளாா்.
அதிக விலை காரணமாக, தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான இறந்துபோன இக்பால் மிா்ச்சியின் சொத்துகளை ஏலம் கோர யாரும் வரவில்லை. எனவே, இந்த ஏலம் மீண்டும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தாா்.