புரெவி புயல் எதிரொலியாக தமிழகம் மற்றும் கேரளத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 26 குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன்-கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கவுள்ளது.
வங்கக் கடலோரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் தமிழகம் மற்றும் கேரளத்தில் தாழ்வான மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தமாக 26 குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் தலா 2 குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு குழுவும், திருநெல்வேலியில் 3 குழுக்களும் குவிக்கப்பட்டுள்ளன.
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த இரண்டு குழுக்களும், கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் தலா ஒரு குழுவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.