புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மற்றும் கேரள முதல்வர்களிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி வியாழக்கிழமை காலை நகரவுள்ளது.
பாம்பன்-கன்னியாகுமரி இடையே இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் தமிழக கடற்கரையை கடக்கவுள்ளது.
இதனையொட்டி தென்மேற்கு மற்றும் தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யவுள்ளதால், மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புரெவி புயலையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழகம் மற்றும் கேரளத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் உதவ போதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார். இரு மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஏற்கனவே குவிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காடினார்.