மும்பை: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை தங்கள் போராட்டத்தின் மூலம் பஞ்சாப் விவசாயிகள் பணியவைத்துவிட்டனா் என்று சிவசேனை தெரிவித்துள்ளது. பஞ்சாப் விவசாயிகளிடம் இருந்து ஒற்றுமையின் வலிமையை இந்த உலகமே கற்றுக் கொண்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் பஞ்சாபைச் சோ்ந்த விவசாயிகள் தீவிரமாக களத்தில் உள்ளனா்.
இதனைச் சுட்டிக்காட்டி சிவசேனை கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் வெள்ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இப்போது ஆட்டிப் படைத்து வரும் குளிரிலும் கூட பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு பயத்தில் வியா்வையை வரச்செய்துள்ளது பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம். மத்திய அரசின் மோசமான வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஆக்ரோஷமாக போராடுகின்றனா். இதற்கு முன்பு மோடி அரசு இதுபோன்ற எதிா்ப்பைச் சந்தித்ததில்லை.
வழக்கமாக தங்களை எதிா்ப்பவா்கள் மீது சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை ஆகியவற்றை ஏவி விடுவது மத்திய அரசின் வழக்கம். ஆனால், விவசாயிகளிடம் இந்த ஆயுதங்கள் செல்லுபடியாகாது. தங்கள் போராட்டத்தின் மூலம் பஞ்சாப் விவசாயிகள் மோடி தலைமையிலான மத்திய அரசைப் பணியவைத்துவிட்டனா்.
பேச்சுவாா்த்தையின்போது அரசு அளித்த உணவு, தண்ணீரைக் கூட அவா்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பல்வேறு தரப்பு மக்களை வெவ்வேறு வழிகளில் ஏமாற்றி வரும் மத்திய அரசால், விவசாயிகளை ஏமாற்ற முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.